This Article is From May 10, 2019

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டது.

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் கங்கவல்லியில் தலா 5 சென்டிமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் லக்கூர், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட இடங்களில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 108 டிகிரி வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

.