தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை மூலம் பரவலான மழை பொழிவு இருந்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன், தனது முகநூல் பக்கத்தில், “அடுத்த ஒரு வாரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் தினமும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பரில் இந்த இடங்களுக்கான சராசரி மழை அளவு 147 மில்லி மீட்டர்தான். இரண்டு நாட்களாக பெய்த மழையிலேயே அந்த மழை பொழிவு கிடைத்துவிட்டது.
குறிப்பாக வரும் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (21 முதல் 25 செப்டம்பர்) மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும். இன்றைய நாளைப் பொறுத்தவரை டெல்டா பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கும். குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் மழையை அனுபவியுங்கள். டெல்டா பகுதிகளைப் பொறுத்தவரை, கடந்த ஒரு மாதமாக தினமும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.