This Article is From Mar 14, 2019

''3 நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

''3 நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்

நீர் ஆதாரங்கள் வற்றத் தொடங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் அதிகபட்சம் 35 டிகரி வெப்பம் பதிவாகும்
  • உள் மாவட்டங்களில் வெப்பம் 4 டிகரி வரை அதிகரிக்கும்
  • 17 மற்றும் 18ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரித்திருப்பதால் நீர் ஆதாரங்கள் வற்றத் தொடங்கியுள்ளது. நல்ல மழை வராதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சென்னையை பொறுத்தவரையில் வெப்பம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரைக்கும் பதிவாக வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் வரை இதே நிலைதான் நீடிக்கும்.

வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் வறண்ட வானிலை காணப்படும். 

உள் மாவட்டங்களான திண்டுக்கல், வேலூர், சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.