ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள சச்சின் பைலட் தனது முகாமில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார். காங்கிரஸூக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியுள்ள ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதன் மூலம் அசோக் கெலாட் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் பைலட் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், எந்த பகுதியில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. அதில், சச்சின் பைட்டும் இடம்பெறவில்லை. கடந்த சனிக்கிழமை முதல் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளார். எனினும், தற்போது அவர் ஹரியானாவின் மானேசார் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் சச்சின் பைலட்டிற்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்து வந்தனர். தற்போது 10 முதல் 12 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று காலை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஜெய்ப்பூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்வில்லை. இதனால், இந்த சந்திப்புக்கு பின்னர் கெலாட்டுக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, குதிரைப்பேரத்தை தவிர்க்கும் விதமாக எம்எல்ஏக்களை சொகுசு விடுதிக்கு காங்கிரஸ் தரப்பினர் தங்கவைத்துள்ளனர்.
இதனிடையே, சச்சின் பைலட் தான் பாஜகவில் இணையப்போவதில்லை என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வருடத்தில் மட்டும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விலகல் காரணமாக மத்திய பிரதேசம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.