This Article is From Jun 04, 2019

மாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்! - 13 பேரின் நிலை என்ன?

அருணாச்சல பிரதேசம் அருகில் மாயமான ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணியில், இரண்டு, எம்.ஐ-17 ரக விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன

மாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்! - 13 பேரின் நிலை என்ன?

சோவியத்தில் வடிவமைக்கப்பட்டது இந்த ஏ.என்.32 ரக விமானம்.

New Delhi:

அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம், திடீரென நேற்று மதியம் மாயமானது. தொடர்ந்து, அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 13 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கிவில்லை.

முன்னதாக, எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேருடன், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து நேற்று மதியம் 12.25க்கு புறப்பட்டு சென்ற அன்டோனோவ் ஏ.என்- 32 ரக விமானம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது.

கடைசியாக நேற்று மதியம் ஒரு மணியளவில் அருணாசலபிரதேசம் மென் சுக்கா என்னும் இடத்தின் அருகில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த விமானம், தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதாக தெரிகிறது. அதிலிருந்து, தற்போது வரை விமானம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாதுகாப்புப்படை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சில மணி நேரங்களாக காணாமல் போன இந்திய விமானப்படை விமானம் குறித்து விமானப்படை துணைத்தலைவர், மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.

அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது டிவிட்டரில் கூறியதாவது, மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதற்கு இந்திய இராணுவம், மற்றும் பல்வேறு அரசு மற்றும் சிவில் ஏஜென்சிகளுடன் இந்திய விமானப்படை ஒருங்கிணைந்து தேடி வருகிறது.

எனினும், மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக தேடுதல் பணிகள் தாமதமடைகிறது, தொடர்ந்து, தேடுதல் பணிகள் இன்றும் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இதேரக விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் புறப்பட்ட நிலையில் காணாமல் போனது. சுமார் 2 லட்சம் கடல் சதுர மைல்கள் வரை தேடியும் இதுவரை அந்த விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம், விமானப்படை வீரர்களை கொண்டு செல்லும் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

.