தெலங்கானாவின் (Telangana) போக்குவரத்துக் கழகமான (Telangana State Road Transport Corporation) TSRTC-ஐச் சேர்ந்த சுமார் 48,000 ஊழியர்கள், பல்வேறு குறைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் (K Chandrasekhar Rao), அனைவரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்குத் தெலங்கானா அரசு, சனிக்கிழமை 6 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது. யாரும் பணிக்குத் திரும்பாததை அடுத்து, பணிநீக்க உத்தரவைப் பிறப்பித்தார் முதல்வர் ராவ்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ், “பண்டிகை நாட்களில் இதைப் போன்று ஒரு காரியத்தில் ஈடுபட்டதும், போக்குவரத்துக் கழகம், 1,200 கோடி ரூபாய் நஷ்டத்திலும் இருக்கும்போது இப்படி ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமை மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாயாகும். பணி நீக்கம் செய்த ஊழியர்களோடு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.
தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50,000 ஊழியர்கள், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த ஸ்டிரைக் காரணமாக பண்டிகை காலங்களில் மக்களின் பயணம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 15 நாட்களில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று அரசு தரப்பு சொல்கிறது. அம்மாநில உயர் நீதிமன்றமும், அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நிலைமை சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது இருக்கும் நிலைமை குறித்து மேலும் பேசிய முதல்வர் ராவ், “போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எந்த ஒழுக்கமற்ற செயல்களுக்கும் மற்றும் மிரட்டலுக்கும் அரசு கட்டுப்படாது. மீண்டும் பணியாளர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிதாக அரசு வேலையில் சேர்பவர்கள், எந்தவித தொழிற்சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கே.சி.ஆரின் இந்த முடிவுக்கு மாநில பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கே.சி.ஆர், தான் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது பாஜக.