বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 07, 2019

என்கவுன்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு!

2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த வீடியோ பதிவுகளை இன்று மாலைக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • Bodies of four rape-accused to be preserved till Monday, 8 pm: High Court
  • Questions raised on Friday's pre-dawn firing that killed the four accused
  • The court will hear the case at 10:30 am on Monday
New Delhi:

தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக்கொன்ற 4 பேரையும் போலீசார் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடலையும் வரும் திங்கள்கிழமை இரவு 8 மணி வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 

அப்போது, அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

இதனிடையே, இந்த என்கவுன்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த வீடியோ பதிவுகளை இன்று மாலைக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  

முன்னதாக, கடந்த நவ.28ஆம் தேதியன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார். 

Advertisement

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர். 

Advertisement

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு காரணமான முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சின்னகுண்ட்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Advertisement