நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியை தொடர்ந்து கனமழையும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றை சமாளிக்க மீட்புக்குழுவினர் தயாராக இருக்க வேண்டுமென மாநில முதல்வர் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக பூபால்பள்ளி மாவட்டத்தில், குண்டன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 விவசாயிகள் தேசிய பேரிடர் மறுமொழிப் படையின் (NDRF) ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
சித்திப்பேட்டையில் வெள்ளத்தில் சிக்கிய லாரியிரிருந்து கிளீனர் மீட்கப்பட்டுள்ளார். டிரைவர் குறித்து தகவல்கள் கிடைக்கப்படவில்லை.
ஹைதராபாத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மறுமொழிப் படை எச்சரிக்கையான நிலையில் உள்ளது.
வாரங்கல் மற்றும் கரீம்நகரில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹனுமகொண்டா நகரமும் அதை ஒட்டிய பகுதிகளும் ஏரிகளாக மாறியுள்ளன. நீர் வடிகாலை அதிகாரிகள் மறுசீரமைப்பு செய்யவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
“பிரகதி பவனில் மழை மற்றும் வெள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து, தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அமைச்சர்களுடன் பேசினார், ஹைதராபாத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க உத்தரவிட்டார்.” என முதலமைச்சர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“வாரங்கல் மற்றும் பூபால்பள்ளி மாவட்டங்களைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதியை வெள்ளம் பாதித்துள்ளதன் காரணமாக சுமார் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 13 பேர் வெள்ளத்திலிருந்து அபயகரமான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.