கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணை தொடர்புகொள்ளலாம்.
ஹைலைட்ஸ்
- 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணை தொடர்புகொள்ளலாம்.
- கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டறிய தொலைபேசி எண்:
- 24 மணிநேரம் இயங்கக்கூடிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா குறித்து மக்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இதன்காரணமாக நாட்டில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. மேலும், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழக அரசு 3,850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
கொரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தமிழக கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழக அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு 24 மணிநேரமும் அறியலாம். 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணை தொடர்புகொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,000 அழைப்புகள் வந்துள்ளன. மக்கள் அதிகமாக விழிப்புணர்வு பெற்றுள்ளதைத்தான் இது உணர்த்துகிறது.
தன்னார்வலர்கள் 044-2538 4530 என்ற 24 மணிநேரம் இயங்கக்கூடிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 4,033 தன்னார்வலர்கள் தொடர்புகொண்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களை தனிமைப்படுத்துதல், மருத்துவ உதவிகளை அளித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நடவடிக்கைகள்.
சென்னையை பொறுத்தவரை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் என சந்தேகப்படும் 24 ஆயிரம் நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.