This Article is From Mar 31, 2020

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு!

31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு!

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு!

ஹைலைட்ஸ்

  • இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு
  • இந்தியாவில் 1,251 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
  • தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பணியாற்றுவதற்காக இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிகமாக 2 மாதங்கள் பணி நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,251 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக 7 பேருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (மார்ச் 30) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பிக்கின்றேன்.

31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுநலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழித்திருப்போம், விலகியிருப்போம். வீட்டிலேயே இருப்போம், கரோனாவை வெல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

.