বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 01, 2019

தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார்: பாக். அமைச்சர் ஒப்புதல்

ஐநா சபையில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. 

Advertisement
இந்தியா

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்துதான், கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை இந்தியா குண்டு போட்டு அழித்தது

New Delhi:

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். 

சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அசார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அதனால், அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார். எனக்கு வந்த தகவல்படி அவர் பாகிஸ்தானில்தான் உள்ளார். ஆனால், வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத வகையில் அவர் உடல் நலிவுற்றுள்ளார்' என்றார்.

தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என்று குரேஷியிடம் கேட்டதற்கு, ‘நாங்கள் கைது செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிரான ஆதாரம் என்ன இருக்கிறது. 
 

 

Advertisement

இந்திய தரப்பு, அசாருக்கு எதிராக ஆதாரத்தை எங்களிடம் கொடுக்கட்டும். அது குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம். எங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம். அதன் பிறகு கைது குறித்து யோசிக்கலாம்' என்று பதிலளித்துள்ளார். 

மசூத் அசார்தான், 2001 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதன்கோட் விமானத் தள தாக்குதல், 2016 உரி தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு முளையாக செயல்ப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
 

 

Advertisement

இப்படிப்பட்ட சூழலில்தான், ஐநா சபையில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. 

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்துதான், கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை இந்தியா குண்டு போட்டு அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

தொடர்ந்து இரு நாட்டு விமானப்படைக்கும் இடையில் நடந்த சண்டையில், இந்தியாவின் போர் விமானி விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன், பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். அவரை இன்று விடுவிப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். 

Advertisement