This Article is From Jul 31, 2019

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15-ல் நடைபெறுகிறது!

இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15-ல் நடைபெறுகிறது!

தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 14 தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பிர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், ஜூலை 14-ல் நடந்து முடிந்த தபால் துறை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று அவர் அறிவித்தார். 

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.