This Article is From Feb 11, 2019

’15 நாளில் உங்கள் மேல் அதிகாரிகள் வரணும்!’- ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை

பாஜக தரப்பு, ‘எந்த நிறுவனமும், நாட்டின் சட்டத்துக்கோ அமைப்புகளுக்கோ மேலே இருப்பவை அல்ல’ என்று எச்சரித்துள்ளது. 

’15 நாளில் உங்கள் மேல் அதிகாரிகள் வரணும்!’- ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை

முன்னதாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ட்விட்டர் நிர்வாகத்துக்கு, பிப்ரவரி 7 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்றக் குழு, சம்மன் அனுப்பியிருந்தது

New Delhi:

‘சமூக வலைதளங்களில் குடிமக்களின் உரிமையை' நிலைநாட்டும் நோக்கில், ட்விட்டரின் சிஇஓ மற்றும் நிர்வாகத்தின் மூத்த நிர்வாகிகள் வரும் 15 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்' என்று நாடாளுமன்றக் குழு ட்விட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

நாடாளுமன்றக் குழுவுக்கு பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர்தான் தலைமை தாங்கி வருகிறார். அவர், ‘ட்விட்டருக்கு 15 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது' என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம், இன்று வெளியிட்ட ஒரு தகவல்படி, '31 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு, இன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, ட்விட்டரின் சி.இ.ஓ உட்பட மூத்த நிர்வாகிகள் வராத வரை, அந்த நிறுவனத்தின் எந்த பிரதிநிதிகளையும் சந்திக்கப் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்' என்று கூறியுள்ளது. 

முன்னதாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ட்விட்டர் நிர்வாகத்துக்கு, பிப்ரவரி 7 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்றக் குழு, சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்த சந்திப்பு இன்று தள்ளி வைக்கப்பட்டது. இன்றும் ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து சரிவர பதில் வரவில்லை. இதையடுத்துதான், கெடு விதித்துள்ளது நாடாளுமன்றக் குழு.

இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் தரப்பு, ‘மிகவும் குறுகிய காலத்தில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அமெரிக்காவில் உள்ளனர். அவர்கள் குறைந்த காலக்கெடுவில் வர முடியாது' என்று விளக்கம் அளித்துள்ளது. 

இதற்கு பாஜக தரப்பு, ‘எந்த நிறுவனமும், நாட்டின் சட்டத்துக்கோ அமைப்புகளுக்கோ மேலே இருப்பவை அல்ல' என்று எச்சரித்துள்ளது. 


 

.