This Article is From Jan 09, 2019

பொங்கல் பரிசு; அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது: ஜெயக்குமார்

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு; அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது: ஜெயக்குமார்

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டதது. அதில், பரிசுத் தொகை வழங்குவதால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஏற்கனவே மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்திற்கு கடன் சுமை அதிகமாக உள்ளது. எனவே வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

அரசு செய்தது சரி, சரியில்லை என்பது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்திற்கு முகாந்திரம் இல்லை என்று எதுவும் இல்லை. நீதிமன்ற கருத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். விருப்பு வெறுப்பு இல்லாமல், அரசு கொள்கை முடிவு எடுத்து அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டது இந்த பொங்கல் பரிசு என்றார்.

பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்ட ரூ.100, தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அன்று இருந்த விலைவாசி என்ன? இன்று இருக்கும் விலைவாசி என்ன? அனைத்தையும் ஆலோசித்து தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அவர் கூறினார்.


 

.