தலைநகர் டெல்லியில் இரண்டு தீவிரவாதிகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அம்மாநில போலீஸ். மேலும் காவல் துறை, மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து டெல்லி போலீஸ் வெளியிட்ட புகைப்படத்தில், இரண்டு நபர்கள் மைல் கல் பக்கத்தில் கருப்பு உடை அணிந்து போஸ் கொடுக்கின்றனர். அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், 011-23520787 or 011-2352474 என்ற எண்ணை அழைத்துப் புகார் தெரிவிக்குமாறும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளதாக உளவுத் துறைக்கு சென்ற வாரம் தகவல் வந்தது. இதையடுத்து பஞ்சாப் போலீஸ் உஷார் நிலையில் இருக்கின்றது.
இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் ஐஜி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு வரும் அனைத்து வழித் தடங்களிலும் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையுடனும் தொடர்பில் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மூவில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதியன்று, துப்பாக்கி முனையில் 4 பேர் காரை கடத்தியுள்ளனர். இது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடுத்துதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.