நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் இந்திய விமானப் படை, இன்று தனது 86வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய விமானப் படையின் ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில், உத்தர பிரதேச மாநில, காசியாபாத்தில் இருக்கும் ஹிண்டன் விமானப் படை தளத்தில் பரேட் நடத்தப்படும். இந்த அணி வகுப்பில், விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்து கொள்வார்.
விமானப் படை அணி வகுப்பைத் தொடர்ந்து பார்வையாளர்கள், அதி தொழில்நுட்பங்கள் கொண்ட விமானங்கள், ஆயுதங்கள், ரேடார், மற்றும் ஏவுகணைகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி வகுப்பு முடிந்தவுடன், ஜாக்குவார், பைசன், மிக்-29, மிராஜ்-2000, சு-30 போன்ற விமானங்களின் சாகசங்கள் அரங்கேற்றப்படும்.
கடந்த 1932 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவை ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, ‘ராயல் இந்திய விமானப் படை’ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு, 1950-ல், ராயல் இந்திய விமானப் படை, இந்திய விமானப் படை ஆனது.
இந்திய விமானப் படை காலத்துக்கு ஏற்றாற் போல், தனது தொழில்நுட்ப வசதிகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வந்துள்ளது. இயற்கை பேரிடர் சமயங்களிலும் இந்திய விமானப் படை மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது.