சரவண பவன் உணவக உரிமையாளர் பி.ராஜகோபாலுக்கு (P Rajagopal) கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். அவரை உடனடியாக சரண்டையுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு, சரவண பவன் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த சாந்தகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். சாந்தகுமாரின் மனைவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவரை, ராஜகோபால்தான் திட்டமிட்டு கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று கூறியுள்ளது.
இந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது. சரவண பவன், சென்னை கிளையில் பணி புரிந்து வந்த துணை மேலாளரின் மகளனா ஜீவஜோதியைத் திருமணம் செய்ய ஆசைபட்டுள்ளார் ராஜகோபால். ஜீவஜோதிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. அந்த சமயத்தில் ராஜகோபாலுக்கு, இரண்டு மனைவிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 1999 ஆம் ஆண்டு ஜீவஜோதி, சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால், இளம் தம்பதியை விவாகரத்து செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு, ஜீவஜோதி மற்றும் சாந்தகுமார் தம்பதி, ராஜகோபால் தரப்பிடமிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் சாந்தகுமார் கடத்தி கொல்லப்படுகிறார்.
சாந்தகுமார், கொடைக்கானல் காட்டில் இருக்கும் பெருமாள்மலையில் கொன்று புதைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரவண பவன் உணவகத்துக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் உள்ளன.