2019 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சி, பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
கும்பமேளாவில், மிக அதிக மக்கள் கூடும் இடத்தைத் திறம்பட நிர்வகித்தது, மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை முன்னெடுத்தது மற்றும் பொது இடங்களில் மிக அதிகமாக ஓவியம் வரையப்பட்ட சம்பவம் உள்ளிட்டவைகள் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு தரப்பு அளித்த தகவலில், ‘கின்னஸ் அமைப்பிலிருந்து பிரயாக்ராஜ் கும்பமேளாவை காண 3 பேர் கொண்ட குழு வந்திருந்தது. அவர்களுக்கு கும்பமேளாவில் செய்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை விளக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி கும்பமேளா நிகழ்ச்சி ஆரம்பமானது. சிவராத்திரியான இன்றுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற உள்ளது. இன்று ஷாஹி சனான் என்று சொல்லப்படும் ராஜ நீராடல் நிகழ்ச்சி நடைபெறும். இது இந்த ஆண்டு கும்பமேளாவில் நடக்கும் 6வது மற்றும் கடைசி நீராடலாகும்.
இதற்கு முன்னர் நடந்த 5 புனித நீராடல்களில் 22 கோடி பக்தர்கள் பங்கேற்றனர்.