This Article is From Oct 28, 2018

‘யூதர்கள் இறக்க வேண்டும்..!’- பிட்ஸ்பர்க் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவரின் வன்மம்

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் போவர்ஸ் என்னும் நபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது

‘யூதர்கள் இறக்க வேண்டும்..!’- பிட்ஸ்பர்க் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவரின் வன்மம்

ராபர்ட், 1966 ஆம் ஆண்டு முதல் 3 துப்பாக்கிகளை வாங்கி வைத்துள்ள தகவலும் அதிர்ச்சையை கொடுத்துள்ளது

PITTSBURGH:

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மாகாணத்தில் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் போவர்ஸ் என்னும் நபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிசூடு சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ராபர்ட் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னர் என்ன கூறினார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 9:45 மணி அளவில், பிட்ஸ்பர்க்கில் யூதர்கள் ஒன்றாக கூடி வழிபாடு செய்யும் இடத்துக்கு 3 துப்பாகிகளுடன் வந்துள்ளார் ராபர்ட். உடனடியாக அவர், மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரி துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு 9:54 மணிக்குத் தகவல் வந்துள்ளது. அங்கு விரைந்த காவல் துறையினர் ராபர்டைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர், போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ராபர்டை பல இடங்களில் சுட்டு, செயலிழக்கச் செய்த போலீஸ், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

முதற்கட்ட விசாரணையில் ராபர்ட் போவர்ஸ், யூதர்களுக்கு எதிராக தனது முகநூலில் தொடர்ந்து கருத்திட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர் பிட்ஸ்பர்கைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்துள்ளது. துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தனது முகநூல் பதிவில் ராபர்ட், ‘என் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் செயல்படப் போகிறேன்'என்று கூறியுள்ளார்.

11 பொது மக்கள் இறந்த இச்சம்பவத்தில், 4 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் ஈடுபடுவதற்கு முன்னர், ‘யூதர்கள் அனைவரும் இறக்க வேண்டும்' என்று ராபர்ட் போவர்ஸ் கத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

போவர்ஸ் குறித்து இதுவரை எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்று எஃப்.பி.ஐ கூறியுள்ளது. மேலும் எஃப்.பி.ஐ தரப்பு, ‘போவர்ஸ் எந்தக் குழுவுடனும் இணைந்து செயல்படுவது போலத் தெரியவில்லை. அவர் தனியாகத் தான் செயல்பட்டிருக்கிறார். ஆனால், இவ்வளவு வக்கிரமான ஒரு செயலில் அவர் ஈடுபட என்ன காரணம் என்பது குறித்து தெளிவில்லை' என்று கூறியுள்ளது.

போவர்ஸ், துப்பாக்கிகள் வாங்குவதற்கு உரிமம் வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் 1966 ஆம் ஆண்டு முதல் 3 துப்பாக்கிகளை வாங்கி வைத்துள்ளதும் அதிர்ச்சையை கொடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நீதித் துறை வட்டாரம், ‘போவர்ஸுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் செயல்பட்டதற்கும், மற்ற கிரிமினல் செயல்பாடுகளுக்கும் வழக்கு தொடரப்படும். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம்' என்று கூறியுள்ளது.

போவர்ஸ், தனது சமூக வலைதளங்கள் மூலமும், இணையதளம் மூலமும் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கருத்ததைத் தெரிவித்து வந்துள்ளார் என்று தெரிகிறது.

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘வெறுப்பின் காரணமாக நமது நாட்டில் நடந்து வரும் குற்றங்கள் என்னை கவலையடைய செய்துள்ளது. இன்று நடந்த தாக்குதல் நம் எல்லோர் மீதும் நடந்த தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இது மனிதத்தின் மீது நடந்த தாக்குதல். இந்த வெறுப்புணர்வை அழிக்க வேண்டுமென்றால், நாம் எல்லோரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்' என்றார்.

.