This Article is From Oct 12, 2018

‘சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டிய நேரம் இது!’- #MeToo குறித்து ராகுல் கருத்து

உலக அளவில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo, தற்போது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது

‘சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டிய நேரம் இது!’- #MeToo குறித்து ராகுல் கருத்து

பெண்களை மரியாதையுடனும் மாண்புடனும் நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது, ராகுல் காந்தி

New Delhi:

உலக அளவில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo, தற்போது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மிகப் பிரபலமானவர்கள் மீது, பாதிக்கப்பட்ட பெண்கள் பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் #MeToo விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களை மரியாதையுடனும் மாண்புடனும் நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அப்படி செய்யாதவர்களுக்கான இடம் தற்போது சுருங்கி வருவது மகிழ்ச்சி. மாற்றத்தைக் கொண்டு வர உண்மையை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டிய நேரம் இது’ என்று பதிவிட்டுள்ளார். 
 

 

பல இந்திய பிரபலங்களைப் போல மூத்த பத்திரிகையாளரும், மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் முதன் முதலாக ட்விட்டரில் #MeToo ஹாஷ்டேக் மூலம் குற்றம் சாட்டினார். அதையடுத்து, பலரும் அக்பர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால், அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிகர்ட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து பாஜக தரப்பு அமைதி காத்து வந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, ‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் இதைப் போன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இது அரசியல், பத்திரிகைத் துறை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். பெண்கள் இது குறித்து பேசத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்’ என்று ட்விட்டரில் கருத்திட்டார். அதேபோல அமைச்சர் ஸ்மிருதி இராணியும், பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அக்பர் குறித்து அமைச்சர் இராணி, ‘அமைச்சர் அக்பர் தான் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

.