மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்தவரான ஆனந்த் ராய், ‘ராகுல் காந்தி எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக சொன்னார்' என்று கூறியுள்ளார்.
வியாபம் தேர்வு குறித்து ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதை அடுத்து, அது குறித்து முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆனந்த் ராய். இதனால், அவர் மிகப் பிரபலமானார். பாஜக அரசுக்கு எதிராக, வழக்கு தொடுத்ததால் அவருக்கு காங்கிரஸுடன் நெருக்கம் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முறை காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து பேசிய ஆனந்த், ‘எனக்கு காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக சீட் தரப்படவில்லை என்றாலும், ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். நான் தான் அதை மறுத்துவிட்டேன்.
வியாபம் ஊழலை பொறுத்தவரை, உண்மை கூடிய விரைவில் வெளிவரும். தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நான் உழைப்பேன்' என்று கூறினார்.
மத்திய பிரதேசத்தில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை, பல பிரச்னைகளுக்குப் பின்னர் காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் மாநிலத்தின் மூத்த தலைவர்களான, திக் விஜய சிங், ஜோதிராதித்யா சிங் மற்றும் கமல்நாத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
230 தொகுதிகளுக்கும் இம்மாதம் 28 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக தான் அங்கு ஆட்சி புரிந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.