தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிதாக வைரஸ் பாதிப்பு உள்ளதாக அறிவித்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பரிசோதனை நடைபெறுகிறது. அதிலும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62 ஆக உயரும் என்று தெரிகிறது.
கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒருவரின் பயண தகவல்களை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஷைலஜா கூறும்போது, மக்கள் தங்கள் பயண தகவல்களை மறைப்பதன் காரணமாக கொரோனா வைரஸ் மேலும் பரவுகிறது. இதனால், பொதுச் சுகாதாரத்துறை சட்டத்தின்படி, பயண தகவல்களை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அவர் அறியப்பட்டார். தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அறிவித்திருந்தார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டவர்களுக்கு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.