This Article is From Nov 15, 2018

‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது’-மத்திய அரசு 'பகீர்' தகவல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நிதி சார்ந்த தகவல்களை கொடுக்குமாறு சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கோரியது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் ஆவணங்கள், மூடிய கவர் ஒன்றில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ‘லெட்டர் ஆஃப் கம்ஃபர்ட்’ கொடுத்துள்ளது பிரான்ஸ், மத்திய அரசு
  • மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்
  • மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜரானார்
New Delhi:

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘சோவ்ரெய்ன் கேரன்டி' என்று சொல்லப்படும் ‘இறையாண்மை ஒப்பந்தம்' கிடையாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பகீர் தகவல் தெரிவித்துள்ளது. 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்று தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய அரசு சில பகீர் தகவல்களை தெரிவித்துள்ளது. 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நிதி சார்ந்த தகவல்களை கொடுக்குமாறு சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கோரியது. இதையடுத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆகியோர், ரஃபேல் ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி நேற்று ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது மத்திய அரசு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் ஆவணங்கள், மூடிய கவர் ஒன்றில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு, டசால்டு நிறுவனம் உத்தரவாதம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஒப்பந்தத்திற்கு ‘லெட்டர் ஆஃப் கம்ஃபர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ‘டசால்ட் நிறுவனம், ஒப்பந்தத்துக்கு உத்தரவாதம் தரவில்லை என்றால், யார் தான் பொறுப்பு. இது குறித்து தான் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது' என்று பதில் வாதம் வைத்தார். 

பொறுப்பு துறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்திகள் பதிவிடுவதால், ரிலையன்ஸ் குழுமம், NDTV மீது 10,000 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

.