கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரை சிரிக்கவைத்துள்ளது. ஆனால் சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களுக்கு அப்படி இருக்கவில்லை.
பிரயன் கூண்டி என்பவர், கலிபோர்னியாவில் பாம்புகளைப் பற்றி பயிற்றுவிக்கும் நிபுணர். மாகாணத்தில் ஒரு நூலகத்தில் பாம்புகள் குறித்து வகுப்பெடுக்க, பையில் சில பாம்புகளை சுருட்டி எடுத்துச் சென்றுள்ளார். அப்போது நூலகத்தின் கார் நிறுத்தும் இடத்தில் தனது பையை வைத்துவிட்டு வாகனத்தை எடுக்க முற்பட்டுள்ளார் கூண்டி.
சில நொடிகளில் பை, வைத்த இடத்தில் இல்லை. அதன் மதிப்பு சுமார் 5,000 டாலர்கள் எனப்படுகிறது. சில நிமிடங்களில் பையை அபேஸ் செய்து செல்வோரைப் பார்த்துள்ளார் கூண்டி. உடனேயே அது குறித்து, ஆன்லைனில் ஒரு செய்தியையும் மக்களுக்கு அவர் பகிர்ந்தார். பையில் இருக்கும் பாம்புகள் நஞ்சுத்தன்மை கொண்டவை இல்லை, எனவே மக்கள் அது குறித்து பயப்பட வேண்டாம் என்பதுதான் அந்தச் செய்தி.
கூண்டி யூடியூப் மூலம், பையை மீட்டுக் கொடுக்குமாறு மக்களுக்குக் கோரிக்கையையும் வைத்துள்ளார். பையில் 4 பைத்தான் வகை பாம்புகள் மற்றும் 12 வயதுடைய பல்லியும் இருந்ததாம்.
தனது யூடியூப் சேனலில் கூண்டி, “நான் யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை. எனது பாம்புகளை மட்டும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவைகள் என் குழந்தைகள் போன்றவை” என்று உருக்கமாக கூறியுள்ளார்.