பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆளும் பாஜக இந்த மசோதாவை கொண்டு வந்திருந்தாலும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்தன. வாக்கெடுப்பின் போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக, வெளிநடப்பு செய்தது.
இப்படி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிக-வும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த இட ஒதுக்கீடு முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பல மாநில அரசுகள், இந்த கல்வியாண்டு முதலே 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.