Thiruma supports Vijay: நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்ட முறையைக் கண்டித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “இதுவரை இல்லாத வகையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர் விஜய் வருமான வரித் துறை சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது சரியல்ல. வருமான வரித் துறை இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு நேர்முடையதா என்கிற கேள்வி எழுகிறது. விஜய் வருமான வரித் துறைக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக, தூண்டுதலின் பெயரில் வருமான வரித் துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் விஜய்க்கும் என்னப் பிரச்னை இருக்கிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால், மத்தியில் தாங்கள் ஆட்சியில் இருப்பதனாலும், மாநிலத்தில் தங்களது கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருப்பதனாலும், யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று நினைக்கிறது பாஜக. இது கண்டிக்கத்தக்கது,” என்று கொதித்துள்ளார்.
கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதில் தயாரிப்பாளர் தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் கடந்த புதன் கிழமை விசாரணை நடத்தினர்.
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக விஜயின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ.300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் வீட்டில் 23 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.