'மோடிக்கு எதிராக யார் பேசினாலும் ஜெயில்தான்; நாட்டில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் ரகசியம் இல்லை' என்று தேச துரோக வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டில் கூட்டு வன்முறை மரணங்கள் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் மணி ரத்னம், பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் பிரதர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.
அந்த கடிதத்தில், “முஸ்லிம்களுக்கு, தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எதிர் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம், வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த கடிதத்தை எழுதிய 50 பேருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று முறையிட்டார். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடிதம் எழுதிய 50 பேர் மீதும் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்-
பிரதமர் மோடிக்கு எதிராக யார் என்ன பேசினாலும், மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு ஜெயில்தான். நாட்டில் ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் ரகசியம் ஏதும் இல்லை.
உண்மையில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்துள்ளன. சர்வாதிகாரா நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.