This Article is From Aug 01, 2018

அசாம் குடிமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

புதிதாக வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அசாமிலுள்ள 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன

அசாம் குடிமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 இலட்சம் அசாம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன

ஹைலைட்ஸ்

  • குடியுரிமை வரைவில் 40 லட்சம் மக்கள் விடுபட்டனர்
  • ஜனவரியில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவோம், தேர்தல் ஆணையம்
  • பாஜக, மக்களை பிரித்து ஆளப் பார்க்கிறது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
New Delhi:

“அசாமின் தேசிய குடிமக்கள் வரைவில் பெயர் விடுபட்டவர்கள் இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும். அவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.

புதிதாக வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அசாமிலுள்ள 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. வங்கதேசத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சி இது என்று அரசு கூறினாலும், எதிர்க்கட்சியினர் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அரசைச் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், “அசாம் குடிமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் வாக்களிக்கலாம். ஜனவரியில் வெளியாகவுள்ள வாக்காளர் பட்டியலானது, தேசிய குடிமக்களின் இறுதிப்பட்டியல் வெளியாவதற்காகக் காத்திருக்காது” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச எல்லையில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவேண்டும் என்ற அசாம் மக்களின் பல்லாண்டு கோரிக்கையின் முடிவாக தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு வெளியாகியுள்ளது. ஆனால் இதில் ஏராளமான மக்களின் பெயர் விடுபட்டுள்ளதை அடுத்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு அரசைக் குற்றம்சாட்டி வருகின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முன்பாக நடக்கவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களையொட்டிய சச்சரவுகள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இப்பதிவேட்டால் நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டு இரத்த ஆறு ஓடும்” என்று அரசை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.