This Article is From Dec 18, 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களை சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

மாணவர்களை சந்திப்பதற்கு முன்னதாக அவர்களுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தார்.

Chennai:

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் சென்னை பல்கலைக் கழக மாணவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்தார். 

அறுவை சிகிச்சையில் இருந்து உடல் நலம் திரும்பி வரும் கமல்ஹாசன், கையில் வால்கர் ஸ்டிக்குடன், மூடப்பட்ட சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

போலீசார் யாரும் உள்ளே வராமல் இருக்க மாணவர்கள் பூட்டுப் போட்டுள்ளனர். மாணவர்களை சந்திப்பதற்கு முன்னதாக, கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்டத்தை கண்டித்திருந்தார்.

இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் 59 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவர்களில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்று. 

சென்னை பல்கலைக் கழகத்தின் விடுதியில் சுமார் 800 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த விடுதிக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த  மாணவர்களை சந்தித்த கமல், 'நம்முடைய மாணவர்கள் இங்கு அகதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர். கட்சிக்கு அப்பாற்பட்டு அவர்களை சந்தித்து பேசுவது என்பது நம்முடைய கடமை' என்று தெரிவித்தார்.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று சென்னையில் போராட்டத்தை தூண்டி விடுவதாக கூறி போலீசார் 2 மாணவர்களை கைது செய்துள்ளனர். 

சென்னை பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 'மாணவர்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வுடன் இருப்பது, கேள்விகளை கேட்பது என்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கேள்விகள் முடக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஜனநாயகம் ஆபத்தான சூழலில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது.' என்று தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.