சத்தீஸ்கர் நந்தன்வன் வன விலங்கு உயிரியல் பூங்காவில் புலி ஒன்று சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்தினை துரத்திச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த சம்பவத்தினையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்து ஓட்டுநர் மற்றும் மற்றொரு ஊழியரைப் பூங்கா நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.
சம்பவ நேரத்தில் அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை திடீரென புலி ஒன்று துரத்தத் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் திரை ஒன்றினை பேருந்திலிருந்த பயணிகள் வெளிப்புறமாகப் புலியை நோக்கி வீசியிருக்கின்றனர். எனவே புலி அதைப் பிடிக்க முயன்றிருக்கிறது. பயணிகள் பயந்து பேருந்தினை வேகமாக இயக்க வலியுறுத்தியுள்ளனர்.
பேருந்து வேகமடைந்ததைத் தொடர்ந்து புலி பேருந்தினை துரத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ மூத்த அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த பிறகு இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இருவரை நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.
வன காப்பகத்தின் நெறிமுறைகளை மீறியதற்காகப் பேருந்து ஓட்டுநர் ஓம்பிரகாஷ் மற்றும் வழிகாட்டி நவீன் புரைனா மீது இந்த நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டிருக்கிருப்பதாக நிர்வாக இயக்குநர் மெர்சி பெல்லா குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வன விலங்கின் பாதுகாப்பை ஊழியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்கள் தவறியிருக்கிறார்கள். ஆகவே நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.