புலிகளை பாதுகாப்பதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவுள்ளது. இந்தப்படை 2-வது அடுக்கு பாதுகாப்பை மேற்கொள்ளும்.
இதுகுறித்து உத்தரகாண்டின் வன உயிரின காப்பகத்தின் தலைமை வார்டன் ராஜிவ் பர்தாரி கூறுகையில், 'கார்பெட் புலிகள் காப்பகத்தை சுற்றி கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இதன் வழியே வேட்டைக்காரர்கள் சரணாலயத்திற்குள் நுழைந்து புலிகளை வேட்டையாடி செல்கின்றனர்.
அவர்களிடமிருந்து புலிகளை பாதுகாக்க சிறப்பு அதிரடிப்படையினர் அமைக்கப்படுவார்கள். புலிகளை நீண்ட காலம் பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை தேவையுள்ளதாக இருக்கிறது. மத்திய அரசு காட்டிய வழிகாட்டுதலின்படி சிறப்பு அதிரடிப் படையினர் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முதலாவதாக, புலிகளுக்கு நெருக்கமான பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2-வது அடுக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு செய்வார்கள். 3-வது அடுக்கில் உளவுத்துறையினர் தகவல் அளித்து அதன் மூலம் புலிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் நீக்கப்படும்.
புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சுமார் 250 புலிகள் கார்பெட் சரணாலயத்தில் இருக்கலாம். இவற்றை பாதுகாக்க சிறப்பு அதிரடிப்படை அவசியம்' என்றார்.