டெல்லியைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட மோகித் மோர் என்பவர் டிக்-டாக் செயலி மூலம் தொடர்ந்து ஃபிட்னஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவருக்கு டிக்-டாக் செயலியில் 5 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
மோர், நஜஃப்கர் அருகேயுள்ள ஒரு இடத்தில்தான் ஜிம்மிற்கு செல்வது வழக்கம். அங்கு அவர் நேற்று ஒரு ஜெராக்ஸ் கடையில் இருந்துள்ளார். அப்போதுதான் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜெராக்ஸ் கடையில் இருக்கும் ஒரு சோபாவில் மோர் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், கடைக்குள் நுழைந்து மோகித் மோரை 5 முறை சுட்டுள்ளனர்.
மோகித் மோரை சுட்டுக் கொன்ற பின்னர், அந்த இடத்தில் இருந்து தப்பித்த கொலைகாரர்களை, அருகில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்று படம் பிடித்துள்ளது. இரண்டு கொலைகாரர்கள், ஹெல்மட் மூலம் முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டனர். ஆனால், ஒருவரின் முகம் சிசிடிவி வீடியோவில் நன்றாக தெரிந்தது.
இந்த கொலை சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீஸ் தரப்பு விசாரித்து வருகிறது. கேங் வன்முறை இதற்குக் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “நாங்கள் மோகித் மோரின் டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து வருகிறோம். மேலும், அவரின் கால் பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதில் இருந்து மோகிதிற்கு எதிராக யாராவது செயல்பட்டார்களா என்று விசாரணை செய்ய உள்ளோம்.
இந்த கொலைக்குக் காரணம் தனிப்பட்ட பகை அல்லது பணத் தகராறாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸ், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
(IANS தகவல்களுடன் எழுதப்பட்டது)