New Delhi: ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக கூறி ரக்பர் கான் என்பவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. அவர் இறப்பதற்கு முன் 4 மணி நேரங்களாக காவல் துறையினருடன் இருந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்து உயிருக்கு போராடி வந்த ரக்பரை கும்பலிடம் இருந்து மீட்டு, மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இடையில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் காவல் துறையினர் இருந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரின் மெத்தனப் போக்கால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அல்வார் காவல் துறையினர், ரக்பர் கான் மறைவிற்கு காரணமான மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ராஜஸ்தான் காவல் துறையினரிடம் இருந்து கைப்பற்றி சிறப்பு குழுவினர் விசாரிக்க வேண்டும் எனவும், அல்வார் பகுதியில் உள்ள பாஜக அரசியல்வாதிகள் இந்த வழக்கை திசை திருப்ப முயல்வதாகவும் ரக்பர் கானின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதனால் வழக்கு விசாரணையில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.