சென்னை: கோவையில் கல்லூரி ஒன்றின், அவசர கால பாதுகாப்பு பயிற்சியின் போது மூன்றாவது தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த இரண்டாம் ஆண்டு மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
இறந்து போன லோகேஷ்வரி, கோவை கலைமகள் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ படித்துவருகிறார். தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மூன்றாவது தளத்திலிருந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பத்தூர் காவல்துறையினர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் சி.சி.டிவி காட்சிகளில், மூன்றாவது தளத்தில் இருந்த லோகேஷ்வரி ஒரு நபரால் தள்ளிவிடப்பட்டு முதல் தளத்தில் உள்ள சன்ஷேடில் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானது பதிவாகியுள்ளது.
காயம்பட்ட மாணவி உடனடியாக தொண்டாமுத்தூரில் உள்ள ஏ.எம்.பி மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் கொண்டு செல்லும் போதே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.