"வெளிநாட்டு முதலீடுகளும் வர வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் முதல்வர் பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்"
தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் கடந்த ஆகஸ்ட் 28-ம்தேதி தொடங்கியது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
முன்னதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வரின் பயணம் குறித்து கேள்வியெழுப்பி, “எடப்பாடி பழனிசாமி எதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
இந்நிலையில் சி.வி.சண்முகம், “எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வரை குறைகூறுவதுதான் ஸ்டாலினின் வேலை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து ஒரு முதல்வர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க பாடுபட்டு வருகிறார். தமிழகம் என்பது உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாகும். இங்கு படித்த இளைஞர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
எனவே, வெறுமனே உள்நாட்டு முதலீடுகள் மட்டும் வந்தால் போதாது. வெளிநாட்டு முதலீடுகளும் வர வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் முதல்வர் பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை பாராட்ட மனமில்லாமல் சிலர் பொங்கி வருகின்றனர்” என்று விளக்கம் கொடுத்தார்.