This Article is From Oct 25, 2019

கடைசி நேரத்தில் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி! - பிகில் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

அதிகாலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடைசி நேரத்தில் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி! - பிகில் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

பிகில் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!

பெரும் சர்ச்சைகளை கடந்து கடைசி நேரத்தில் திட்டமிட்டபடி, தமிழகத்தில் இன்று பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில், நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் (25-ம் தேதி) திரைக்கு வந்துள்ளன. 

இதையொட்டி பெரும்பான்மையான திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி, 4 மணி என ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நேரங்களில் ரசிகர்கள் சிறப்புக்காட்சிகளுக்கு திரையரங்குள் ஏற்பாடு செய்திருந்தது.

ரசிகர்களும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகும் 25-ம்தேதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. 

அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். 

மேலும், பிகில் திரைப்படத்திற்கு மட்டுமல்ல தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றன. 

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

ரசிகர்களும் கூட முதல் காட்சி பார்க்க 2,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார். மேலும், அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. 

இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பிகில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பதிவில் நன்றி தெரிவித்திருந்தார். அதில், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். 

.