தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் - தரமணி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டீ மீட்டர் மழை பெய்தது.