நிரவ் மோடியிடம் இருந்து அவர் பெற்ற கடனை மீட்பதற்காக அவரின் 11 சொகுசு கார்கள் 173 சுவர் சித்திரங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
சுவர் சித்திரங்கள் மட்டும் ரூ. 53 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரவ் மோடியிடம் ரோல்ஸ் ராய்ஸ், போர்ச்சே, மெர்சிடிஸ் உள்ளிட்ட கார்கள் அவரது சொகுசு கார்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு முறை கடன்பெற்று அதனை செலுத்தாமல் மோசடி செய்தார் என்பது நிரவ் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டு ஆகும்.
அவருடன் உறவினர் மெகுல் சோக்ஸியும் இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார். அவர் தற்போது ஆன்ட்டிகுவாவில் இருக்கிறார். இருவரையும் இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதில் நிரவ் மோடியை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் இன்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். 5 லட்சம் பவுண்டுகளை செலுத்தினால் மட்டுமே நிரவுக்கு ஜாமீன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரவ் மோடியின் சொகுசு கார், நகைகள் உள்ளிட்ட அவரிடம் இருந்து மீட்கப்பட்டவைகளின் மதிப்பு ரூ. 1,600 கோடி இருக்கும் என அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரி புர்வி, சகோதர்ர்கள் நெஹால் மற்றும் நீஷால், தந்தை தீபக்குமார் மோடி, உறவினர் மிரி பன்சாலி உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.