தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கூடுதல் பலத்துடன் எதிர்கொள்ளும் விதமாக, மேலும் 2,570 நர்ஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 டாக்டர்கள், 2323 நர்ஸ்ககள், 1508 ஆய்வக டெக்னீசியன்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து, 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஆணை பெற்று 3 தினங்களுக்குள், பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள். தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.