அரசாங்கம் விமர்சனங்களைக் கேட்கிறது. அதற்கு எப்போதும் பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பிய சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். மக்களவையில் பொருளாதார மந்த நிலை குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ராகுல் பஜாஜ்க்கு அமித் ஷா அளித்த பதிலை குறிப்பிட்டு அரசாங்கம் விமர்சனங்களை கேட்கும் விருப்பத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு என்று கூறினார்.
“நான் தான் பேசுவேன், நீங்கள் பேச முடியாது என்று சொல்வதை விட விமர்சனங்களை கேட்கவும் அதற்கு பதிலளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற அணுகு முறையில் தான் நாங்கள் இருக்கிறோம். உள்துறை அமைச்சரின் பதிலைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறினார்.
“என்னை மிக மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள். அவர்கள் எனது பதவிக்காலத்தை முடிக்கக் கூட காத்திருக்கவில்லை. தயவுசெய்து எனக்கு மேலும் யோசனை தாருங்கள் என்றுதான் கூறுகிறோம். நாங்கள் அதைச் செய்வோம். கேட்கும் அரசு என்று ஒன்று இருந்தால் அது பிரதமர் மோடியின் அரசாங்கம்” என்று கூறியுள்ளார். சனிக்கிழமையன்று தி எகனாமிக் டைம்ஸ் செய்திதாள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் பஜாஜ், பிரதமர் மோடியின் நிர்வாகமுறையை கண்டு அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா “எதற்கும் பயப்படத் தேவையில்லை. நரேந்திர மோடி அரசாங்கம் தொடர்ந்து ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற சூழல் இருப்பதாக நீங்கள் கூறினால். நிலையை சரிப்படுத்த நாங்கள் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்வை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் “அமித் ஷா பொருத்தமான முறையில் பதிலளித்ததாகவும் விமர்சனங்களை ஊக்குவிப்பதாகவும்” கூறினார். “எந்தவொரு தொழில் தலைவரும் அதிகாரத்திற்கு உண்மையைச் சொன்னால் நல்லது. அவர்கள் பேசட்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.