உலகின் மிகச்சிறந்த 4 ஆயிரம் விஞ்ஞானிகளில் 10 பேர் மட்டுமே இந்தியர்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த தகவலை க்ளாரிவேட் அனலைடிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், விண்வெளி ஆய்வில் தலைசிறந்து விளங்கும் இஸ்ரோ, தொழில்நுட்ப கல்விகளில் தலைசிறந்த ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., உள்ளிட்டவை இங்கு உள்ளன. இருப்பினும், விஞ்ஞானிகள் என்ற அளவில் ஒப்பிடுகையில் சர்வதேச தரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1 சதவீதம் கூட இல்லை என தெரியவந்துள்ளது.
க்ளாரிவேட் அனலைடிக்ஸ் வெளியிட்டுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் இடம்பெற்றிருக்கிறார். அவரை தவிர்த்து ஐ.ஐ.டி. கான்பூர், ஐ.ஐ.டி. மெட்ராஸ், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு பேராசிரியர்களும், என்.ஐ.டி. போபாலில் இருந்து 2 பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 10 பேர் மட்டுமே தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில்தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. க்ளாரிவேட் அனலைடிக்ஸ் தகவலின்படி மொத்தம் 2,639 பேர் அமெரிக்காவில் உள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா,பிரான்ஸ், சுவிஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.