This Article is From Jul 30, 2020

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!

நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை.

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், 

தாங்கள் 30/07/2020 அன்று கொரோனா குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால்; அதன் தொடர்பாக ஒருசில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதே என் கடிதத்தின் நோக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்; திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் போன்ற சென்னை அடுத்த மாவட்டங்களில் தீவிரமாக பரவுவதை புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆசியாவிலேயே மிக பெரிய குடிசை பகுதியாகவும், மிக நெருக்கமான மக்கள் தொகையுள்ள மும்பை- தாராவி பகுதியில் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை உலக சுகாதார நிறுவனம் முதல் மும்பை முதல்வர் வரை வெகுவாக பாராட்டியுள்ளனர். நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை.

அதிக தாக்கத்திற்கு உள்ளான நம் 3 மாவட்டங்களில் ஏதோ மேல்வாரியான சில கூடுதல் நடவடிக்கை எடுத்திருப்பது கொரோனாவை கட்டுப்படுத்த போதுமானது அல்ல. கொரோனா பெரும்பாலும் மனிதர்களுக்குள்ளாக தொற்றிக்கொள்கிறது. மனித நடமாட்டத்தை தீவிரமாக ரத்து செய்தால் இதனை ஒடுக்குவது சாத்தியமே. இதை தான் தாராவியில் செய்துள்ளார்கள்.

முதல்வரே, தாங்கள் தயவு தாட்சண்யமின்றி கீழே குறிப்பிட்டுள்ளவற்றை இந்த 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 முதல் 15 தேதி வரை தீவிரமாக செயல் படுத்துங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த 3 மாவட்டங்களின் எல்லைகளை இறுக்கமாக மூடுங்கள்.

வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் (கொரோனா தடுப்பு அதிகாரிகள், காவல்துறை & மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் அத்தியாவசிய சேவை புரிபவர்கள் தவிர) கடும் நடவடிக்கை எடுக்கவும்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு நாட்களுக்கு தேவையான விலையற்ற உணவு பொருட்கள் அவர்கள் வீட்டிற்கே அனுப்பவேண்டும். மேலும் அவர்கள் சில்லறை செலவிற்கு குடும்பத்திற்கு ரூ.1000 கொடுக்கவும்.

15 நாட்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்திக்கு தேவையான அனைத்து விலையற்ற மருந்துகள் அனைத்து வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

அவசர சிகிச்சைக்கு இப்பகுதியில் நடமாடும் மருத்துவமனைகளும் & சோதனை சாவடிகளும் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தின பரிசோதனைகளை தீவிர படுத்த வேண்டும்.

இதற்காக ஆகும் செலவு இதுவரை கொரோனா தடுப்பு திடத்திற்குக்காக செய்யப்பட்டத்தில் மிக சிறிய அளவாகவே இருக்கும்.

இவை அனைத்தையும் தீவிரமாக செயல்படுத்தினால் மக்கள் நடமாட்டம் இங்கு முழுவதுமாக முடக்கப்பட்டு கொரோனா தொற்று பரவலை கனிசமாக கட்டுப்படுத்த முடியும்.

உலகிலேயே ஜனநெருக்கம் மிக அதிகமாக உள்ள தாராவியில் சாதிக்கும் போது நாமும் இதை சாதிக்கலாமே என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.