பிரபல நடிகையும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி, பாலியல் பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு உடனடி தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ஐதராபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், 'பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி அடித்துக் கொல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் சரி. குற்றவாளிகளுக்கு இதுமாதிரியான தண்டனைதான் வழங்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் மத்திய அரசின் பதில் என்ன என்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க தவறியவர்கள் தங்களது பெயரைச் சொல்ல வெட்கப்பட வேண்டும்' என்று கூறினார். அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், 'பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் பிரபல நடிகையும், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினருமான மிம்மி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பதிவில், 'பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற ஜெயா பச்சனின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். பாலியல் குற்றவாளிகளை மிகுந்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, நீதிக்காக நாம் காத்திருக்கக் கூடாது. அவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதேபோன்று பிரபலங்கள் பலரும் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சி போன்ற தொழில்நுட்ப உதவிகளுடன் குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர்.