சபரிமலை கோயிலுக்கு வயது வரம்பின்றி பெண்கள் அனைவரும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி மாதத்தின்போது விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் எவரையும் அனுமதிக்காமல் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் புனேவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தான் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருவதாகவும், தனக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் சக செயற்பாட்டாளர்களுடன் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள், திரும்பிச் செல் என்று முழக்கமிட்டனர்.
அவரை சபரிமலைக்கு ஏற்றிச் செல்ல எந்தவொரு ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும் முன் வரவில்லை. இருப்பினும், சபரிமலைக்கு சென்ற தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்று த்ருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு சபரி மலை கோயிலில் நடை திறக்கப்படுவதால் அப்போது, அங்கு தரிசனம் செய்யும் எண்ணத்தில் தேசாய் உள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2016-ல் ஷானி ஷிங்னாபூர் கோயிலில் நுழைந்து, 60 ஆண்டு காலமாக இருந்து வந்த நடைமுறையை த்ருப்தி தேசாய் முடிவுக் கொண்டு வந்தார். அதுவரையில் பெண்கள் எவரும் கோயிலில் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி நேற்று கூட்டியது. இதனை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன.