துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல்-மகோடம், தனது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல்-உசேனை அச்சுறுத்தியுள்ளார் என்று லண்டன் நீதிமன்றம் ஒன்று இது குறித்தான வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.
தனக்கும் தங்களது இரண்டு பெண் குழந்தைகளின் உயிர்களுக்கும் அச்சப்பட்ட இளவரசி ஹாயா, அவர்களோடு இங்கிலாந்துக்குக் கடந்த ஏப்ரல் மாதம் தஞ்சம் புகுந்துள்ளார். அங்குதான், 45 வயதாகும் இளவரசி ஹாயா, கணவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது இளவரசி ஹாயா, தன் உயிருக்குக் கணவர் ஷேக் முகமதுவால் அச்சுறுத்தல் வந்துள்ளது என்று கூறியுள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டுகளில் உச்சபட்சமாக, தங்களது இரண்டாவது பெண் குழந்தையை, 11 வயது இருக்கும் போது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் திருமணம் செய்து வைக்கப் பார்த்தார் என்று தெரிவித்துள்ளார். அது குறித்து முகமது பின் சல்மான் தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அனைத்து வாதங்களையும் கேட்ட லண்டன் நீதிமன்றம், இளவரசி ஹாயாவுக்கும் அவரது குழந்தைகளுக்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர உத்தரவிட்டது. ஷேக் முகமதுவுக்கு எதிராகவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
ஷேக் முகமது, துபாயை சுற்றுலா தளமாகவும் வியாபாரக் கேந்திரமாகவும் மாற்றியதற்கு அதிகம் பாராட்டப்படுபவர். லண்டன் குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கை, துபாய் அரசு, தனிப்பட்ட வழக்காகத்தான் பார்க்கிறது. அதே நேரத்தில் துபாயின் வெளிப்படைத்தன்மைக்கும் வியாபாரத்துக்கும் இந்த வழக்கினால் தாக்கம் ஏற்படலாம்.
தங்கள் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சவூதி அரேபிய அரசு தரப்பு எந்தவித விளக்கங்களையும் அளிக்கவில்லை.
தங்களது மகள்களான ஷஸ்மா மற்றும் லதீஃபா ஆகியோருக்கு உதவி செய்ய முயன்றபோதுதான், இளவரசி ஹாயாவுக்கும் கணவர் ஷேக் முகமதுவுக்கும் இடையில் உறவுச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஷரியா சட்டம் மூலம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷேக் முகமது, தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகச் சொல்கிறார் இளவரசி ஹாயா.