முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக மகாராஷ்டிரா வந்த பிரதமர் நரேந்திர மோடியை புனே விமான நிலையத்தில் நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே வரவேற்பு அளித்தார்.
மகாராஷ்டிராவில் 3 நாட்கள் நடைபெறும் காவலர்கள் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று புனே விமான நிலையம் வந்தார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்றார்.
இதேபோல், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமரை வரவேற்ற பின்னர் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பைக்கு திரும்பினார்.
பிரதமர் மோடியின் பாஜகவும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகளும் கடந்த 30 வருடங்களாக வகித்து வந்த கூட்டணி சுழற்சி முறையில் முதல்வர் பதவி, சரி சமமான அதிகார்ப்பகிர்வு உள்ளிட்ட சிவசேனாவின் பிடிவாதமான கோரிக்கைகளால் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரமாக முயற்சித்து வந்தது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் துணையுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து சுமார் 80 மணி நேரத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது. தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளை கைப்பற்றியது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு மேலும் 40 எம்எல்ஏக்கள் துணை தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து, அஜித் பவாரை அணுகி அவர் மூலம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக முயற்சித்தது. எனினும் அது பலனளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தன. தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.
(With inputs from PTI)