மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அமைந்து சரியாக ஒருமாதத்தை கடந்துள்ள நிலையில், கூட்டணி உருவாக காரணமாக சரத் பவாரை ஒரு நிகழ்ச்சியில் பாராட்டினார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் குறைந்த இடங்களை கொண்டு ஆட்சியை எப்படி உருவாக்குவது என்பதை காட்டியுள்ளார்.
சிறிய நிலத்தில் எப்படி அதிகமாக உற்பத்தி செய்வது என்பதை நாம் பார்க்கிறோம். விவசாய உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும், குறைந்த இடங்களைக் கொண்ட அரசை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் சரத் பவார் எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.
உத்தவ் தாக்கரேவுடன் சரத் பவாரும் அதே மேடையிலே அமர்ந்திருந்தார். முன்னதாக மகாராஷ்டிராவில் பாஜகவே மிகப்பெரிய கட்சி என்று சமீபத்தில் சட்டசபையில் பெருமையாக பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே இந்த கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த அக.21ம் தேதி நடந்த முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா இரண்டாவது இடத்தை பிடித்தது. தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தற்போது, உத்தவ தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.
மிகப்பெரிய கட்சியாக விளங்கிய பாஜக, சிவசனேவுடன் கூட்டணியை அமைத்ததால் பெரும்பான்மை கிடைத்தது. எனினும், இருகட்சிகளுக்கும் அதிகாரப் பகிர்வு செய்வதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் பிரிந்தன.
கருத்தியல் ரீதியான எதிர்கருத்து கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது என்ற எண்ணத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை சரத்பவார் பேசி கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவிக்க வைத்தார். பல வார கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த கூட்டணி இறுதியானது.
எனினும், இந்த கூட்டணி நீண்ட காலம் தாக்குபிடிக்காது என ஆரம்பம் முதலே பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.