புதுச்சேரியில், பறக்கும் படைக் குழுவைச் சேர்ந்தவர்கள் கணக்கில் வராத 1.86 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரியின் கிராண்டு பஜார் பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி., மாறன் கூறுகையில், ‘லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, புதுச்சேரி காவலர்கள் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான், ஒரு வண்டியில் பல லட்சம் மதிப்பிலான பணம் எடுத்துச் செல்லப்படுவது குறித்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட சோதனையின் போதுதான், ஒரு காரில் 1.86 கோடி ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்தோம். பணம் குறித்து சரியான ஆவணங்கள் இல்லாத நிலையில், வருமான வரித் துறையினரிடம் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்பது சட்டம்.
புதுச்சேரியில் இருக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கும். அதன் முடிவு, மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.