Nithyananda News - "10 சதவிகித பணம், நன்கொடையாகக் கிடைக்கிறது என்றால், மீதமுள்ள 90 சதவிகித பணம் அடித்து ஏமாற்றிப் பிடிங்குவதாகத்தான் இருக்கும்"
Nithyananda News - இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்த அடுத்தடுத்த வழக்குகளால் தலைமறைவானவர் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா (Nithyananda). அவரைக் கைது செய்ய காவல் துறை உட்பட பல்வேறு அமைப்புகள் முயற்சி மேற்கொண்டாலும், தொடர்ந்து எல்லோருக்கும் ‘தண்ணீ' காட்டி வருகிறார். முன் எப்போதையும் விட சமூக வலைதளங்களில் அவர் ஆக்டிவாக இருப்பதும், சர்ச்சைகள் கிளம்பிய கடந்த ஒரு மாதத்தில்தான். இப்படி அடுத்தடுத்து புயலைக் கிளப்பும் தகவல்கள் வந்த நேரத்தில்தான், ‘கைலாசா' (Kailasa) என்னும் புதிய நாட்டை நித்தியானந்தா உருவாக்க உள்ளதாகவும், அதற்கென்று தனி சட்ட சாசனம், பாஸ்போர்ட், கொடி, சின்னம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்களில் ஒருவரான விஜயகுமார் என்கின்ற பிரேம மயானந்தா, அவர் குறித்து வெளிவராத பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ‘நித்தியானந்தாவைத் தேடி எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது' என்ற கேள்விக்கு, “ஒன்று, அவரிடம் இருக்கும் ஹீலிங் பவர். அதைவைத்து அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். இன்னொன்று, அவரிடம் ஒரு வகுப்புக்குச் சென்றாலே வசியம் செய்துவிடுவார். அவரின் பேச்சைக் கேட்டாலே நாம் அவரை விட்டு வராத வண்ணம் செய்துவிடுவார்,” என அதிர்ச்சிகர பதிலைத் தந்தார்.
தொடர்ந்து, ‘அவருக்கு எப்படி இவ்வளவு நிதி கிடைக்கிறது. யார் கொடுக்கிறார்கள்?' என்பதற்கு விஜயகுமார், “ஆள் பலம், மாபியா பலம் மூலம்தான் அனைத்தையும் சாதிப்பார் நித்தியானந்தா. 10 சதவிகித பணம், நன்கொடையாகக் கிடைக்கிறது என்றால், மீதமுள்ள 90 சதவிகித பணம் அடித்து ஏமாற்றிப் பிடிங்குவதாகத்தான் இருக்கும்.
அங்கிருக்கும் சந்நியாசிகளின் முக்கியப் பணியே, நன்கொடை வசூலிப்பதுதான். தினமும் ஒவ்வொருவரும் இவ்வளவு நிதியை வசூலித்திருக்க வேண்டும் என்று இலக்கு வைப்பார்கள். அதை அடையாதவர்களுக்கு தண்டனையெல்லாம் உண்டு,” என்று கூறி அதிரவைத்தார்.
நித்தியானந்தா மீது தொடர்ந்து எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி மனம் திறந்த விஜயகுமார், “ஆசிரமத்தில் இருக்கும் பலருக்கு நித்தியானந்தா பாலியல் சீண்டல், தொல்லைகள் கொடுப்பார் என்பது உண்மைதான். அவர் என்னையே தனிப்பட்ட முறையில் அறைக்கு அழைத்திருக்கிறார். பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போதுதான் அவர் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரர் என்பது எனக்குத் தெரிந்தது.
நித்தியானந்தாவின் அறை எப்படி இருக்கும் தெரியுமா. தேக்குக் கட்டில், இறுக்குமதி செய்யப்பட்ட மெத்தை, குளிரூட்டப்பட்ட அறை என சகல வசதிகளுடன்தான் இருப்பார். சந்நியாசி என்றாலே, முற்றும் துறந்தவர்களாகத்தானே இருப்பார்கள். ஆனால், நித்தியானந்தா ஆசிரமத்தில், அவர் உட்பட எவரும் சந்நியாசத்தைப் போற்றுவதே கிடையாது,” என வருத்தப்படுகிறார்.
இறுதியாக ‘கைலாசா' பற்றி பேசியவர், “இப்போதுதான் கைலாசா என்னும் புதிய நாட்டை அவர் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் 2017 ஆம் ஆண்டு அவருடன் இருந்த வரையில் அது பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஆனால், பெரிதாக எதையோ இவர்கள் சாதிக்கப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.
எங்களிடம் பேசுகையில் நித்தியானந்தா, கர்நாடகாவில் இருக்கும் ஆசிரமத்தை ‘கைலாசா' என்றும், திருவண்ணாமலையில் இருக்கும் ஆசிரமத்தை ‘ஆதி கைலாசா' என்றும் அழைத்தார்,” என முடித்தார்.