உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
எனினும், சில நாட்களில் அவர் ஜாமின் வாங்கி வெளியே வந்தார். மற்றொரு குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. எனினும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில், அந்த பெண் 80 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரது நிலை கவலைக்கிடமாக ஆனதை தொடர்ந்து, லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் அங்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, அந்த தன் மீது தீ வைத்ததாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை செல்லும் வழியில் அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்று அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது கிராமத்தில் இருந்து சென்று கொண்டிருந்துள்ளார், அப்போது ரயில் நிலையம் அருகே சென்ற போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 2 பேர் உட்பட 5 பேர் அங்கு அவருக்காக காத்திருந்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் என்னை சுற்றி வளைத்து எனது கழுத்தில் கத்தியால் குத்தினர். இதைத்தொடர்ந்து, என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.